தமிழக செய்திகள்

தூத்துக்குடி துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீன்பிடி துறைமுகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

Maalaimalar

தூத்துக்குடி:

வங்கக்கடல் பகுதியில் இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வங்கக்கடலில் இலங்கை மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் நிலை கொண்டு வருகிறது.

இலங்கை கடல் பகுதியில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது,

இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரிம், ஆந்திர கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கடல் பகுதியிலும் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுத்து அறிவித்துள்ளது

இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 4-வது நாளாக விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் மற்றும் விசைப்படகுகள் மீன்பிடி துறைமுக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக மீன்பிடி துறைமுகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாத காரணத்தால் மாவட்டம் முழுவதும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வங்கக்கடலில் உருவாகி உள்ள இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை தூத்துக்குடி துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.