சித்ரா பவுர்ணமி சிறப்பு நாளை முன்னிட்டு திருவண்ணாமலை கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் செல்வது வழக்கம்.
நாளை மறுநாள் வியாழக்கிழமை இரவு 9.50 மணிக்கு சித்ரா பவுர்ணமி தொடங்கி வெள்ளிக்கிழமை இரவு 11.07 மணி வரை நடைபெறுகிறது.
பக்தர்கள் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. வியாழக்கிழமை அதிகாலையில் இருந்து சென்னை, விழுப்புரம், திண்டிவனம், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.
மேலும் மே 1-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மே தின விடுமுறையாகும். அதனால் 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது. இதனால் வெளியூர் பயணம் அதிகரிக்கும் என்பதால் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு 30-ந்தேதி மாலையில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்கப்படும்.
கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளை விட கூடுதலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை காலம் என்பதால் பஸ், ரெயில்கள் அனைத்தும் நிரம்பி செல்கின்றன. குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அனைத்து ரெயில்களும், சிறப்பு ரெயில்களும் நிரம்பி விட்டதால் மக்கள் அரசு பஸ்களை நாடி செல்கிறார்கள்.
அரசு விரைவு பஸ்கள் மற்றும் இதர போக்குவரத்து கழக பஸ்களுக்கு முன்பதிவு செய்து நெரிசல் இல்லாமல் பயணம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.