சட்டசபை தேர்தலில் அதிமுக 3வது இடத்துக்கு தள்ளப்பட்ட நிலையில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பதவி விலகக்கோரி கட்சிக்குள் முக்கிய நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இது ஒருபுறம் இருக்க, கட்சியின் பொது செயலாளரான எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதல் இல்லாமல், சட்டசபையின் அதிமுக குழுத் தலைவராக எஸ்.பி. வேலுமணி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், 17-வது சட்டசபையின் முதல் நாளான இன்று, அனைத்து உறுப்பினர்களும் எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்று வருகின்றனர்.
இன்றைய கூட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் சில எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு வந்த நிலையில், எடப்பாடி வருகை தந்த பிறகு எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஒரு குழுவினராக சட்டசபைக்கு வருகை தந்தனர்
மேலும், எடப்பாடி பழனிசாமி எம்.எல்.ஏ.வாக பதவியேற்கும்போது சிலர் மட்டுமே மேஜையைத் தட்டி வரவேற்றனர். எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவின் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் மேஜையை தட்டி வரவேற்றனர். இதில் இருந்தே உட்கட்சி பூசல் சட்டசபைக்குள்ளே வெடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பேரவைக்கு வந்தும், எம்.எல்.ஏ.வாக பதவியேற்காமல் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.
இந்நிலையில் அதிமுகவில் இபிஎஸ்-க்கு வேலுமணி எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படும் நிலையில், சட்டசபை வளாகத்தில் திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி, அதிமுக எம்எல்ஏ எஸ்பி வேலுமணி நீண்ட நேரமாக சந்தித்து பேசிக்கொண்டனர். இருவரும் சுமார் 30 நிமிடம் பேசிக்கொண்டனர்.
அதிமுகவில் தலைமையை மாற்றுவதற்கு கலக குரல் எழுந்ததாக கூறப்படும் நிலையில் இந்த சந்திப்பு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.