தமிழக செய்திகள்

மாணவிகள் தற்காப்பு கலையை பயில்வது இன்றைய சூழலில் மிக அவசியம் - சௌமியா அன்புமணி

உலகம் வெப்பம் ஆவதை தடுக்கவும் நிலத்தடி நீரை சேமிக்கவும் அதிகளவில் மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பல்லாவரம் கண்டோண்மண்ட் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் பசுமைத் தாயகம் மற்றும் அரிமா சங்கம் சார்பில் பள்ளி மாணவ- மாணவியருக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பசுமைதாயகம் தலைவரும் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மாணவ மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கினார்.

அவர் சௌமியா அன்புமணி பேசும்போது, உலகில் 70 சதவீதம் தண்ணீராலும் 30 சதவீதம் நிலத்தாலும் சூழப்பட்டுள்ளது. தண்ணீர் உப்பு தண்ணீராகவே உள்ளது. உலக அளவில் கணக்கிடும் போது குறைந்த அளவே ஆறு ஏரி நிலத்தடியில் இருந்து நல்ல தண்ணீர் கிடைக்கிறது. நிலத்தடி நீரும் வெகுவாக குறைந்து வருகிறது. தண்ணீரின் சேமிப்பை மாணவர்கள் தற்போதே உணர வேண்டும்.

இதுபோல் ஆண்டு தோறும் வெப்பமும் அதிகரித்து வருகிறது. உலகம் வெப்பம் ஆவதை தடுக்கவும் நிலத்தடி நீரை சேமிக்கவும் அதிகளவில் மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் தற்போதைய சூழலில் சிறுவர், சிறுமிகள் தற்காப்பு கலையை கற்றுக்கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. தற்காப்பு கலை கற்றுக்கொண்டு தைரியமானவர்களாக மாற வேண்டும். தீய பழக்க வழக்கம் கொண்ட நபர்களிடமிருந்து விலகி இருங்கள். அவர்கள் நண்பர்களாகவே இருந்தாலும் சரி அவர்களை உங்களால் மாற்ற முடியாது. அவர்களுடன் பேசுவதையும் தவிர்த்து விடுங்கள் என கேட்டுக்கொண்டு மரக்கன்றுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பசுமைத்தாயகம் மாநில ஒருங்கிணைப்பாளர் ஐநா கண்ணன், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் வெங்கடேசன், மாவட்ட துணைச் செயலாளர் பூக்கடை முனுசாமி, அரிமா சங்க நிர்வாகிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.