தமிழக செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் சார்ஜாவில் இருந்து கடத்தி வரப்பட்ட அரை கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

பயணியை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தனது உடமையில் மறைத்து எடுத்து வந்த குடிநீர் குழாயில் ரூபாய் 13.69 லட்சம் மதிப்பிலான 180 கிராம் தங்கத்தை எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கே.கே. நகர்:

திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், சார்ஜா, அபுதாபி உள்ளிட்டநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று சார்ஜாவிலிருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் இருந்த பயணி ஒருவரின் கைப்பையை சோதனை செய்தபோது அவரது கைப்பையில் கம்பி வடிவில் மறைத்து எடுத்து வந்த அரை கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து அந்த பயணியை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் சோதனை மேற்கொண்டனர்.

மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்த தனியார் விமானத்தில் வந்த பயணி ஒருவரின் நடத்தையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை தனியே அழைத்து சென்று சோதனை செய்தனர்.

அப்போது, அவர் தனது உடமையில் மறைத்து எடுத்து வந்த குடிநீர் குழாயில் ரூபாய் 13.69 லட்சம் மதிப்பிலான 180 கிராம் தங்கத்தை எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்த சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

SCROLL FOR NEXT