எச்.ராஜா 
தமிழக செய்திகள்

எச்.ராஜாவுக்கு சிறப்பு கோர்ட் விதித்த 6 மாத சிறை தண்டனை ரத்து

சென்னையில் உள்ள எம்.பி,, எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட், ராஜாவுக்கு தலா 6 மாதம் சிறை தண்டனை விதித்து, கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பளித்திருந்தது.

பெரியார் சிலை உடைப்பு தொடர்பான கருத்து தெரிவித்தது, திமுக எம்.பி., கனிமொழியை விமர்சனம் செய்ததாக தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜாவுக்கு எதிரான இரு வழக்குகளில் தலா 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து சிறப்பு கோர்ட் விதித்த தீர்ப்பை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா, கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் தனது எக்ஸ் தளத்தில் திரிபுராவில் லெனின் சிலை உடைக்கபட்டது போல், தமிழகத்தில் பெரியார் சிலையை அகற்றுவோம் என பதிவிட்டிருந்தார்.

இதே போல் 2018-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் திமுக எம்.பி., கனிமொழிக்கு எதிராக எக்ஸ் தளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டிருந்தார். இதுதொடர்பாக தந்தை பெரியர் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், ஈரோடு போலீசார் , எச்.ராஜாவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர். இந்த இரு வழக்குகளையும் விசாரித்த சென்னையில் உள்ள எம்.பி,, எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட், ராஜாவுக்கு தலா 6 மாதம் சிறை தண்டனை விதித்து, கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பளித்திருந்தது.

இந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரி எச்.ராஜா சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் நீதிபதி வி.லட்சுமிநாராயணன் இன்று பிறப்பித்த தீர்ப்பில், எச்ராஜாவின் பதிவுகளால் சமூகத்தில் இடையூறுகள் ஏற்பட்டது என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனக்கூறி, இரு வழக்குகளிலும் தண்டனை விதித்து பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டார்.