தமிழக செய்திகள்

சிவகங்கை பேருந்து விபத்து: த.வெ.க. தலைவர் விஜய் இரங்கல்

அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பெண்கள் உள்பட 11 பேர் பலி.13 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பெண்கள் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 13 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் - பிள்ளையார்பட்டி சாலையில் அரசுப் பேருந்துகள் இரண்டு, நேருக்கு நேர் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி, மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் பூரணமாகக் குணமடையும் வகையில், தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்தி, உயர்தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.