ராஜபாளையம் அருகே சேத்தூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் எஸ்.பி.செல்லப்பிள்ளை படத்திறப்பு மற்றும் புத்தக வெளியீட்டு விழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட, இயக்குனர் சமுத்திரக்கனி புத்தகத்தை பெற்றுக்கொண்டார்.
விழாவில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கூறியதாவது,
தற்போது ஒரு கட்சியில் எம்.எல்.ஏ ஆகிவிட்டு, மறுநாளே வேறு கட்சியில் இணையும் அவலம் நிகழ்கிறது. ஆட்சி மாறினால் கட்சி மாறுவது தமிழகத்தில் வாடிக்கையாகி விட்டது. ஆனால் கம்யூனிஸ்ட்கள் எப்போதும் கட்சி மாறுவதில்லை.
தமிழக மக்கள் அதிமுக, திமுக இல்லாமல் புதியவர் ஆட்சிக்கு வர வேண்டும் என விரும்பி உள்ளனர். ஆளுங்கட்சிக்கு எதிரான மனப்போக்கு தமிழக மக்கள் மத்தியில் இருந்துள்ளது.
சில இடங்களில் எங்களது எதிர்ப்பையும் நாங்கள் பதிவு செய்துள்ளோம். ஆனால் அந்த எதிர்ப்பு ஆட்சி மாற்றம் வரும் அளவுக்கு இருக்கிறது என்பதை நாங்கள் அறியாமல் விட்டு விட்டோம்.
இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை. தனிப்பெரும் கட்சி என்ற முறையில் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ள தவெகவுக்கு நாங்கள் ஆதரவு அளித்தோம். நாங்கள் அன்று அந்த முடிவை எடுக்காவிட்டால் இன்று, குடியரசு தலைவர் ஆட்சி தான் இருந்திருக்கும்.
நேரடியாகவோ மறைமுகமாகவும் பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது, மக்கள் தீர்ப்பை மதித்து நிபந்தனை அற்ற ஆதரவை தெரிவித்தோம்.
இந்த அரசு எந்தவிதமான பொருளாதார கொள்கையை கடைபிடிக்க போகிறது என்பது தெரியவில்லை. தற்போது பயிர்கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது. அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக் கொள்ளும் ஆட்சியாக இருந்தால் தொடர்ந்து தவெகவை ஆதரிப்போம்.
எப்போதும் மக்கள் நலன் சார்ந்தே எங்கள் முடிவு இருக்கும். நல்லதை பாராட்டவும், மக்கள் விரோத நடவடிக்கையை சுட்டிக்காட்டவும் தயங்க மட்டோம். அரசியல் பிரிவு செயலாளராக ஜோதிடரை நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். மறுநாளே அந்த நியமனத்தை முதலமைச்சர் ரத்து செய்தார்.
மே 4-ந்தேதி மாலை மு.க.ஸ்டாலினை சந்தித்த கூட்டணி கட்சி தலைவர்களான எங்களிடம் நாம் இதுவரை சிறப்பான ஆளுங்கட்சியாக செயல்பட்டோம். இனி சிறந்த எதிர்கட்சியாக செயல்படுவோம் என்றார். புதிதாக ஆட்சி அமைப்பவருக்கு 6 மாதம் அவகாசம் அளிப்போம். அவர்களின் செயல்பாட்டை பொறுத்து அதன்பின் விமர்சிப்போம் என்றார். ஆனால் அன்று மு.க.ஸ்டாலின் சொன்னதற்கும், இன்று திமுக தலைவர்களின் பேச்சுக்கும் சம்பந்தம் இல்லை.
முதல்முறையாக பதவியேற்கும்போது அண்ணாவும், கருணாநிதியும் புதியவர்கள் தான். புதிதாக பொறுப்பேற்றவர்களுக்கு அவகாசம் கொடுங்கள். 6 மாதம் சும்மா இருங்கள். தினசரி போராட்டம் நடத்தும் கம்யூனிஸ்ட்களே, 15 நாட்களாக அமைதியாக உள்ளோம்.
தொகுதிக்கு நல்லது செய்தால் வெற்றி பெறலாம் என சொன்னால் யாரும் நம்பாதீர்கள். கொளத்தூர் தொகுதிக்கு பார்த்து பார்த்து செய்தவர் ஸ்டாலின். மக்கள் நினைத்தால் எவ்வளவு செய்தாலும் தூக்கி எறிந்து விடுவார்கள் என்பதற்கு ஸ்டாலின் தோல்வி ஒரு உதாரணம்.
பூரண மது விலக்கு என்பது நடைமுறையில் சாத்தியம் இல்லை. கோவில், பள்ளி, பேருந்து நிலையம் அருகே உள்ள மதுக்கடைகளை மூடும் முதலமைச்சரின் முடிவு நல்ல முயற்சி.
மேகதாது அணை விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை முதலமைச்சர் கூட்டி, ஆக்கப்பூர்வமான முடிவை எடுக்க வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தி உள்ளோம்.
தமிழக அரசு புதிய நிதிநிலை அறிக்கை உருவாக்கம் செய்யும் முன் அனைத்து தரப்பு மக்களையும் கலந்தாலோசித்து, சிறந்த நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.