தமிழக செய்திகள்

தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் - செங்கோட்டையன்

தமிழக வெற்றிக் கழகம் ஒரு பக்கம் தியாகம், இன்னொரு பக்கம் மனிதநேயத்தோடு இயங்குகிற இயக்கம்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், கோபி சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளருமான கே.ஏ.செங்கோட்டையன் கோபியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக வெற்றிக் கழகத்தை பொருத்தவரை ஒரு பக்கம் தியாகம், இன்னொரு பக்கம் மனிதநேயத்தோடு இயங்குகிற இயக்கம் ஆகும். மக்களோடு பணியாற்றக்கூடிய தலைவர் விஜய். நாளை தமிழகத்தை ஆளப்போகிற தலைவர் பழைய சரித்திரம் சொல்லும். காரணம் 2026 தேர்தல் வெற்றி என்பது சரித்திரத்தில் இடம்பெறக்கூடிய வரலாறாக அமையும், இந்தியாவே வியக்கும்.

தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு வாழும் காலமாக அமையும், அதற்காகத்தான் மனிதநேயத்தோடு இந்த இயக்கத்தை உருவாக்கியுள்ளார்கள். அதுமட்டுமல்ல தியாகத்தோடு இந்த இயக்கத்தை வழி நடத்திச் செல்கிறார் தலைவர் விஜய்.

இதற்கெல்லாம் வரும் 4-ந்தேதி பதில் சொல்லும். தமிழகத்தில் முதலிடம் பெறக்கூடியவராக விஜய் திகழ்வார். மக்கள் கருத்துக்கணிப்பு தெளிவாக இருக்கும். நீங்கள் எதற்கு வாக்களித்தீர்கள் என்பது உங்களுக்குத்தான் தெரியும்.

முதல் வாக்கு அளிக்கின்ற அத்தனை பேரும் புதிய மாற்றத்தை எதிர்கால தமிழகத்தை ஆள்வதற்கு ஒரு சிறந்த தலைவர் கிடைத்துள்ளார் என்ற எண்ணம் உள்ளது. அது 4-ந்தேதி பிரதிபலிக்கும். வெற்றிக்கு பிறகு விஜய் ஆட்சியை பிடிப்பார். நாங்கள் 150 முதல் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்.

கர்வத்தை கொண்டுள்ள சாம்ராஜ்யம் அழிந்து போகும். அதை யாராலும் தடுக்க முடியாது. எங்களிடத்தில் உள்ளவர்கள் தெளிவாக உள்ளனர். தலைவருக்காக உயிரையும் தியாகம் செய்ய தயாராக உள்ளனர். இது உலக வரலாற்றில் மூன்று இரண்டு தலைவர்களுக்கு பிறகு தற்போது காணப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் செங்கோட்டையனிடம் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

சமூக வலைதளங்களில் விஜய் அமைச்சரவையில் இடம் பெற்றவர்கள் பட்டியல் வெளியாகி இருக்கிறதே என்ற கேள்விக்கு,

அதிகாரப்பூர்வமின்றி சமூக வலைதளங்களில் பரவி வரும் பட்டியலுக்கு பதிலளிக்க முடியாது.

வெற்றி பெற்றதற்கு பிறகு தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் அனைவரையும் விஜய் கட்சி தலைமை அலுவலகத்திற்கு வர சொல்லியது குறித்து கேட்ட கேள்விக்கு,

இது தொடர்ந்து நடைபெறக்கூடிய ஒன்று தான்.

இளம் வாக்காளர்கள் அதிகம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களித்துள்ளனர் என்று வைகோ கூறிய கருத்திற்கு,

உண்மையிலே மனம் திறந்து வைகோ தெரிவித்துள்ளார், என்றார்

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் த.வெ.க சட்டமன்ற தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது என்று கூறியதற்கு,

பாஜக இந்த தேர்தலுக்குப் பிறகு இருக்குமா? இருக்காதா? என்பது தேர்தலுக்கு பின்பு தெரியும் என்றார்