தமிழக செய்திகள்

அ.தி.மு.க. - த.வெ.க. கூட்டணி என்பது பகல் கனவு: செல்வப்பெருந்தகை

கூட்டத்தில் சிலர் த.வெ.க. கொடியுடன் கலந்து கொண்டதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இதனால் கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறி இருக்கிறார்.

மாலை மலர்

சென்னை:

சென்னை சத்தியமூர்த்தி பவனில், முன்னாள் முதலமைச்சர் பக்தவத்சலத்தின் 129-வது பிறந்தநாளையொட்டி அவரது உருவப் படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

அதன்பின், செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேகமான வளர்ச்சி பணிகளை முன்னெடுத்து வருகிறார்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் தொழில்கள் தொடங்குவதற்கான அனுமதி வழங்குவதில் தாமதம் செய்கிறார்கள்.

காஞ்சீபுரம் மாவட்டம் அல்ல எல்லா மாவட்டங்களிலும் மாவட்ட நிர்வாகம் கோப்புகளுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கூட்டத்தில் த.வெ.க. கொடியுடன் சிலர் கலந்து கொண்டதாகவும், இதனால் கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டு இருப்பதாகவும் கூறி இருக்கிறார்.

அவர் காண்பது கூட்டணி கனவு. அது பகல் கனவாகத்தான் இருக்கும். காங்கிரஸ் கூட்டத்திலும் த.வெ.க. கொடி பறக்கத்தான் செய்கிறது. அதற்காக நாங்களும் கூட்டணி கனவு காண முடியுமா? என தெரிவித்தார்.