தமிழக செய்திகள்

திருச்சி விமானத்தில் மலேசியாவில் இருந்து கடத்தி வருப்பட்ட அறிய வகை பாம்புகள்-பல்லிகள் பறிமுதல்

கடத்தலை தடுக்க சுங்கத்துறை, வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.விரைந்து வந்த பறிமுதல் செய்யப்பட்ட பாம்பு மற்றும் பல்லியை வனத்துறையினரும் பார்வையிட்டு விசாரணை செய்து வருகின்றனர்.

திருச்சி:

திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

அதே போல் அந்த நாடுகளிலிருந்தும் திருச்சிக்கு விமானங்கள் இயக்கப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு வரும் விமான பயணிகள் தங்கம், வெளிநாட்டு பணம் மற்றும் அரியவை உயிரினங்கள் உள்ளிட்டவைகளை கடத்தி வரும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

இந்த கடத்தலை தடுக்க சுங்கத்துறை, வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலிந்தோ விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது சென்னையை சேர்ந்த முகமது மொய்தீன் (வயது 30) என்ற பயணி சந்தேகம் படும்படியாக நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த அதிகாரிகள் அவரை தனியே அழைத்து சென்று அவரது உடமைகளை சோதனை செய்தனர்.

அப்போது 47 அரியவகை பாம்பு மற்றும் 2 பல்லி வகைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனை பறிமுதல் செய்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து வந்த பறிமுதல் செய்யப்பட்ட பாம்பு மற்றும் பல்லியை வனத்துறையினரும் பார்வையிட்டு விசாரணை செய்து வருகின்றனர்.