புதிதாக தலைமைச் செயலகத்தை கட்டுவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று சீமான் கூறினார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
13½ லட்சம் கோடி கடன் இருப்பதாக தமிழக அரசுதான் நிதிநிலை அறிக்கையில் கூறியிருந்தது. வட்டிக்கு கடன் வாங்கி வாங்கிய கடனுக்கு வட்டிக் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் எதற்கு புதிய தலைமைச் செயலகம்? தற்போதுள்ள தலைமைச் செயலகத்தில் பல மேதைகள் அமர்ந்து ஆகச்சிறந்த சட்டங்களையும் திட்டங்களையும் தீட்டியிருக்கிறார்கள்.
ஒருவேளை, தலைமைச் செயலகத்துக்கு அவசியம் ஏற்பட்டால் கருணாநிதி கட்டிய ஓமந்தூரார் மருத்துவமனை இருக்கும் கட்டிடத்தை பயன்படுத்தலாம். அதற்காக மருத்துவமனையை வேண்டுமானால் வேறு இடத்திற்கு மாற்றலாம். புதிதாக தலைமைச் செயலகத்தை கட்டுவதற்கு அனுமதிக்க மாட்டோம்.
நடிகர் விஜய்சேதுபதி தெரிவித்தது, பொதுவான கருத்து. அவர் குறிப்பிட்டது இதற்கு முன்பிருந்த அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும். தலைவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும் என்பதைதான் தம்பி விஜய்சேதுபதி தெரிவித்திருந்தார். அதனை விமர்சிப்பது சரியாக இருக்காது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.