சேலம்:
சேலத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் 5 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் ஆயிரம், 2 ஆயிரம் இலவச பொருட்கள் என கொடுப்பதாக அறிவித்து தேர்தல்களத்திற்கு வந்திருக்கிறார்கள். ஆனால் நான் மாற்றத்தை தருவதாக கூறி களத்தில் வந்து நிற்கிறேன்.
நாம் தமிழர் கட்சி கல்வியை தரும் அந்த கல்விக்கு ஏற்ற வேலைவாய்ப்பை தரும். வேலைக்கேற்ற சம்பளத்தை தரும் அதன் மூலம் மக்களின் வாழ்வு மேம்பெறும்.
நஞ்சு இல்லா தண்ணீர், குடிநீர், தூய உணவு தந்து விடுவேன் மின்சார உற்பத்தியை நானே மேற்கொள்வேன். சூரிய ஒளி மூலமாகவும் பல காற்றாலைகள் ஏற்படுத்தியும் மின்சாரத்தை உற்பத்தி செய்வோம்.
சேலத்தில் மேட்டூர், ஓமலூர், ஆத்தூர் என அனைத்து இடத்திலும் வேலைவாய்ப்பு மக்களுக்கும், இளைஞர்களுக்கும் உண்டாக்கி தருவேன்.
அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்து கொடுத்தது பற்றி கேட்கிறீர்கள் அது ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம். எங்கெங்கெல்லாம் தி.மு.க. அமைச்சர்கள் போட்டியிடுவார்களோ அங்கெல்லாம் கூட்டணி கட்சியான தாமரைக்கு இடத்தை ஒதுக்கி கொடுத்துள்ளார்கள்.
இது அ.தி.மு.க. மேற்கொண்டு இருக்கிற புரிந்துணர்வு ஒப்பந்தம். தமிழ்நாட்டில் மதவாத கட்சி வரக்கூடாது. அதை ஒழிக்க வேண்டும் என கூறுகிறார்கள் அல்லவா அதற்கான ஒப்பந்தம்.
விஜய் போட்டியிடும் தொகுதியில் பா.ம.க. போட்டியிடுவதாக அ.தி.மு.க. கூட்டணியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு அதுவும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் தான். இலவசம் என்பது ஏமாற்று வேலை நான் அதை ஆதரிக்கவில்லை, எதிர்க்கிறேன். இலவசத்திற்கான பணம் எங்கிருந்து எடுப்பீர்கள் என்றார்.