திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகில் கடல் அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் உள்வாங்குவதும், வெளியே வருவதுமாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இன்று அமாவாசை என்பதால் இயற்கை சீற்றம் காரணமாக திருச்செந்தூர் கடல் இன்று காலையில் இருந்தே சுமார் 100அடி தூரம் உள்வாங்கி காணப்படுகிறது. இதனால் அய்யா வைகுண்டர் அவதாரபதி அருகே கடற்கரையில் பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிகிறது. பாறைகள் மீது பக்தர்கள் ஏறி நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர். ஆனாலும் பக்தர்கள் வழக்கமாக நீராடும் பகுதியில் பக்தர்கள் எந்தவித அச்சமின்றி புனித நீராடி வருகின்றனர்.
திருச்செந்தூர் கடல் கடந்த சில நாட்களாக இவ்வாறு நடப்பதால் இது வழக்கமான ஒன்று என பக்தர்கள் கருதி அச்சமின்றி புனித நீராடி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.