தமிழக செய்திகள்

ஏற்காட்டில் பள்ளி வேன் மோதி 3-ம் வகுப்பு மாணவி பலி

மேனகாவை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

சேலம் மாவட்டம் ஏற்காடு வாழவந்தி கிரா மத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகள் மேனகா (8). இவர் ஏற்காடு முண்டகம்பாடி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். மேனகா வாழவந்தி மற்றும் ஏற்காடு டவுன் பகுதியில் உள்ள பல்வேறு பள்ளிகளில் படிக்கும் பள்ளி குழந்தைகளை ஏற்றி வரும் தனியார் வேனில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம்.

விபத்து

அதே போல் மாணவி இன்றும் வேனில் பள்ளிக்கு புறப்பட்டார். வேனை கீரைக்காடு புத்தூர் கிராமத்தை சேர்ந்த பெத்தமணி மகன் ரங்கநாதன் என்பவர் ஓட்டினார். வேனில் வந்த குழந்தைகளை பல்வேறு பள்ளிகளில் இறக்கிவிட்ட நிலையில் ஏற்காடு லேடீஸ் சீட் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் இறக்கி விட்டு விட்டு ரங்கநாதன் வேனின் பின்னால் மேனகா இருப்பதை கவனிக்காமல் வேனை பின்னோக்கி இயக்கி உள்ளார்.. அப்போது வேனின் பின்னால் இருந்த மேனகா மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது.

அங்கிருந்தவர்கள் அலறல் சத்தம் கேட்டு டிரைவர் வேனை நிறுத்தி பார்த்த போது மேனகா தலையில் நசுங்கி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். உடனடியாக அங்கிருந்தவர்கள் மேனகாவை மீட்டு ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பரிதாப பலி

அங்கு மேனகாவை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த மேனகாவின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மேனகாவின் உடலை பார்த்து கதறி அழுது புரண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே அங்கு சென்ற ஏற்காடு போலீசார் வேன் டிரைவர் ரங்க நாதனை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். 8 வயது பள்ளிக்குழந்தை வேன் ஏறி விபத்துக்குள்ளாகி இறந்த சம்பவம் ஏற்காட்டில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.