மதுரையில் வரும் 24-ந்தேதி நடைபெற உள்ள ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தையொட்டி ஆதரவாளர்களுக்கு சசிகலா அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
இதயதெய்வம் புரட்சித் தலைவி தமிழக மக்களின் உரிமைகளுக்காகவும் பெண்ணினத்தை பாதுகாத்திடவும், ஏழை எளிய சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடவும் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர். 'மக்களால் நான் மக்களுக்காகவே நான்" என்று தன் உயிர்மூச்சு உள்ளவரை வாழ்ந்துக் காட்டிய ஒப்பற்ற மக்கள்தலைவி தமிழக மக்களின் உள்ளங்களில் இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள கோட்டைமேடு பகுதியில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனார் திடலில் நடைபெறவுள்ள புரட்சித்தலைவி அம்மாவின் மாபெரும் பிறந்தநாள் பொதுக்கூட்டமும் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படும்.
தமிழக மக்களின் அன்பும் ஆதரவும் எந்நாளும் தொடர்ந்திட கழகத் தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையோடு மக்கள் தொண்டாற்றிட புரட்சித் தலைவியின் பிறந்த நாளினை சிறப்புடன் கொண்டாடுவோம். புரட்சித் தலைவரின் கொள்கைகளை காப்பாற்றிடவும் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் எண்ணங்களை ஈடேற்றிடவும், எதிரிகளையும் துரோகிகளையும் வேரறுத்திடவும் புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்தநாளில் உறுதியேற்போம். உரிமை கூட்டமாக ஒன்றுபடுவோம், வென்று காட்டுவோம்.
இவ்வாறு அதில்கூறியுள்ளார்.