சென்னையில் பணி நிரந்தரம், தூய்மைப் பணிகளைத் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட இதர கோரிக்கைகளை வலியுறுத்தி மண்டலம் 4,7,8, ஆகியவற்றைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் கடந்த 3 நாட்களாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று முதலமைச்சரின் பெரம்பூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக தகவல்கள் வெளியானது. இதனால் பெரம்பூர் அலுவலகம் முன்பு 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இதனால் தண்டையார்பேட்டை மண்டலத்தை சூழ்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அங்கு விரைந்த போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து அவர்களை தடுக்க முயன்றனர். அப்போது போலீசாருக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கலைந்து போக மறுத்து, சாலையிலேயே அமர்ந்து போராடிய பெண் பணியாளர்கள் உள்ளிட்ட பலரைக் காவல்துறையினர் குண்டுகட்டாகத் தூக்கிச் சென்று வலுக்கட்டாயமாக வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.