தமிழக செய்திகள்

மத்திய அரசு பணிக்கான திறன் தேர்வு முடிவு வெளியிடு-13,088 பேர் தேர்ச்சி

மத்திய அரசு பணிக்கான திறன் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் 13.088 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாலை மலர்

சேலம்:

எஸ்.எஸ்.சி.எனப்படும் இந்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு உள்ளிட்டவற்றை நடத்தி தகுதியான நபர்களை அரசு பணிக்கு தேர்வு செய்கிறது. அந்த வகையில் ஒருங்கிணைந்த உயர்  நிலைத் தேர்வு 2019 -ம் ஆண்டுக்கான அறிவிப்பை எஸ்.எஸ்.சி. வெளியிட்டது.  

இதனை தொடர்ந்து  டயர்-1 எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் டயர்-2 தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.  இந்த தேர்வில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 10-ம் வகுப்பு, 11, 12-ம் வகுப்பு, பட்டம், முதுநிலை பட்டம் படித்த ஏராளமானோர் பங்கேற்று எழுதினர். 

இந்த நிலையில் டயர்- -2 முடிவுகளை எஸ்.எஸ்.சி.  30.9.2021 அன்று வெளியிட்டது. இதில் 28,508 விண்ணப்பதாரர்கள்  தட்டச்சுத் தேர்வில் கலந்துகொள்வதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தற்காலிக திறன் தேர்வு (தட்டச்சுத்தேர்வு) முடிவு நேற்று  வெளியிட்டுள்ளது. இந்த திறன் தேர்வில் நிர்ணயிக்கப்பட்ட கட்-ஆப் அடிப்படையில் மொத்தம் 13,088 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

இதையடுத்து அவர்களின் சான்றிதழ் சரிபார்க்கப்படும். சான்றிதழ் சரிபார்ப்பு நடத்துவதற்கான அட்டவணை  பிராந்திய அலுவலகங்களின் இணையதளங்கள் விரைவில் வெளியிடப்படும்.  

அந்தந்த பிராந்திய அலுவலகங்களின் இணையதளத்தை தவறாமல் பார்வையிடுமாறு விண்ணப்பதாரர்களுக்கு இந்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவுறுத்தியுள்ளது.

திறன் தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் தேர்வு முடிவை தங்களின் ஐ.டி மற்றும் கடவுச்சொல்லை  பயன்படுத்தி பார்க்கலாம். இந்த  வசதி வருகிற 9-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை இருக்கும். அதன் பிறகு பார்க்க முடியாது.