சேலம் செவ்வாய்ப்பேட்டை பால் மார்க்கெட்டில் குவிக்கப்பட்டுள்ள எலுமிச்சை பழங்கள். 
தமிழக செய்திகள்

சேலத்தில் வரலாறு காணாத வகையில் எலுமிச்சை பழம் விலை உயர்ந்தது.

சுட்டெரிக்கும் கோடை வெயிலால் வரலாறு காணாத வகையில் எலுமிச்சை பழம் ரூ.20 ஆக உயர்ந்துள்ளது.

மாலை மலர்

சேலம்:

தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் எலுமிச்சை மரங்கள் பரவலாக சாகுபடி செய்யப்படுகின்றன.  இங்கு அறுவடை செய்யப்படும்  எலுமிச்சை பழங்கள் லாரிகளில் சேலத்திற்கு கொண்டு வரப்படுகிறது. 

இந்த ஆண்டு தமிழகத்தில் எலுமிச்சை விளைச்சல் குறைந்துள்ளதால் ஆந்திராவில் இருந்து டன் கணக்கில் எலுமிச்சை பழங்கள் சேலம் அப்சரா தியேட்டர் பாலம் இறக்கம் அருகே உள்ள மண்டியில் இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் கோடை காலம் தொடங்கி வெயில் சுட்டெரித்து வருவதால் வெளியே சென்று வரும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். 

வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கம்மங்கூழ், தர்பூசணி, இளநீர், லெமன் ஜூஸ், சாத்துக்குடி ஜூஸ், கரும்பு ஜூஸ், சர்பத் உள்ளிட்ட பல்வேறு வகையான ஜூஸ் வகைகளை அதிகமாக பொதுமக்கள் குடித்து வருகின்றனர்.

இதனால் எலுமிச்சை பழத்தின் தேவை  அதிகரித்துள்ளது. மேலும் அதன் விலையும் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. மண்டிக்கு எலுமிச்சை பழம் லோடு வந்த உடனே மாவட்டத்தின் உள்ள சில்லரை கடைகளுக்கு கடை உரிமையாளர்கள் வாங்கி சென்று விடுகின்றனர். ஊறுகாய் நிறுவனத்தினரும் மண்டியில் முகாமிட்டு மூட்டை, மூட்டையாக வாங்கி சென்று விடுகிறார்கள்.

இதன் காரணமாகவும், மறுபுறம் தேவை அதிகரிப்பாலும் எலுமிச்சை பழத்தின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. சேலம் மார்க்கெட்டுகளில் பழத்தின் தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்து கடை உரிமையாளர்கள் விற்கிறார்கள்.

பெரிய அளவில் இருக்கும் பழம் ரூ.20 எனவும், இதை விட சற்று அளவு குறைந்த பழம் ரூ.15, ரூ.10 எனவும் சிறிய பழம் ரூ.5, 8 என்ற விலையில் விற்கப்படுகிறது.