சேலம்:
சேலம் மாநகராட்சிப் பகுதியில் வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுகிழமை) போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெறுகிறது.
மாநகராட்சிப் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், ரெயில் நிலையம், பேருந்து நிலையங்கள் மற்றும் முக்கிய இடங்கள் என 182 மையங்களில் 88 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
போலியோ சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். 5- வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.
ஓரிரு நாட்களுக்கு முன் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும், முகாம் நாளில் மீண்டும் சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும்.
குழந்தை பிறந்த ஒரிரு நாட்கள் ஆகியிருந்தாலும் சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகிறது.
எனவே பெற்றோர்கள் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நாளன்று அருகாமையில் உள்ள மையங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் சென்று போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.