தமிழ்நாடு செய்திகள்

சேலத்தில் கள்ளக்காதலியுடன் பேசிய மேளகலைஞர் அடித்துக்கொலை

சேலத்தில் கள்ளக்காதலியுடன் பேசிய மேளகலைஞர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

மாலை மலர்

சேலம்:

சேலம் வீராணம் அருகே உள்ள குள்ளம்பட்டி ஆதிதிராவிடர் தெரு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 56).  மேள கலைஞர். இவருக்கு சின்னம்மாள் (50) என்ற மனைவியும், ஒரு மகள், 2 மகன்களும் உள்ளனர்.

வலசையூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (50). கூலி தொழிலாளி. இவர் பழைய பேப்பர் சேகரித்து, அதை விற்பனை செய்து வந்தார்.  இவருடைய 2-வது மனைவி மாரியம்மாள் (48). 

கந்தசாமியும், சந்திரனும் நண்பர்கள் ஆவர். 

இவர்கள் கூட்டாக மதுகுடிப்பது வழக்கம்.  இந்த நிலையில் சந்திரனின் மனைவி மாரியம்மாளுடன் கந்தசாமிக்கு  பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது.  இதை அறிந்த  சந்திரன், மாரியம்மாளை  கண்டித்து  வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் கந்தசாமி, மாரியம்மாளுடன் வலசையூர் பஸ் நிறுத்தம்  சந்தை  அருகே பேசிக் கொண்டிருந்தார். 

அப்போது அங்கு வந்த சந்திரன்,  எனது மனைவியுடன் ஏன் பேசுகிறாய்?.   அவருடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளாயா? என்று கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.  தகராறு முற்றவே  ஆத்திரம் அடைந்த சந்திரன், கட்டையை எடுத்து கந்தசாமியை சரமாரியாக தாக்கினார்.

இதில் கந்தசாமிக்கு மண்டை உடைந்து முகம் போன்ற பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.   அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு  சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பெற்று வந்த கந்தசாமி இன்று காலை  சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் வீராணம் போலீசார் சந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.