போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி. 
தமிழக செய்திகள்

தாமதமாக வந்ததால் தேர்வுக்கு அனுமதி மறுப்பு-அரசு அலுவலர்கள் போராட்டம்

சேலம் அருகே அரசு அலுவலர்களுக்கான துறை சார்ந்த தேர்வுக்கு தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவர்கள் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மகுடஞ்சாவடி:

சேலம் மாவட்டம் காகாபாளையத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் துறை சார்பில்  அரசு அலுவலர்களுக்கான துறை சார்ந்த தேர்வு நேற்று தொடங்கியது.

இன்றும், நாளையும் (வியாழக்கிழமை) மற்றும் வருகிற 7, 8 ஆகிய தேதிகள் வரை இந்த தேர்வு நடைபெறுகிறது. தேர்வு காலையில் 8.45 மணிக்கு தொடங்கி மதியம் 1. 45 மணிக்கு முடிவடையும். இந்த தேர்வு கணினி வழியாக நடத்தப்படுகிறது.

இன்று காலை  8.45 மணிக்கு நடைபெற இருந்த தேர்விற்கு  40-க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் 15 நிமிடம் காலதாமதமாக வந்ததாக கூறப்படுகிறது.  இதனால் அவர்களுக்கு  அங்குள்ள தேர்வு கண்காணிப்பாளர்  அவர்கள் தேர்வு எழுத  அனுமதிக்க மறுத்துள்ளனர்.

இதனால் மனமுடைந்து தேர்வு எழுத வந்த அரசு அலுவலர்கள் தங்களை தேர்வு எழுத அனுமதிக்குமாறு கண்காணிப்பாளரிடம் தொடர்ந்து  கூறினர்.  ஆனால் அனுமதி மறுக்கப்பட்டதால், அவர்களுக்கும் கண்காணிப்பாளருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கல்லூரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து தங்களை தேர்வு எழுத அனுமதிக்குமாறு கூறி  ஆட்டையாம்பட்டி- காகாபாளையம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட முயன்றனர்.   மகுடஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர், வெங்கடேஷ் பிரபு, எஸ்.ஐ. ரகு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். 

இதில் காலதாமதமாக வந்ததால் 40-க்கும் மேற்பட்டோருக்கும்  தேர்வு எழுத அனுமதி முற்றிலும் மறுக்கப்பட்டது. இதனை  தொடர்ந்து, அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

SCROLL FOR NEXT