சேலம்:
சேலம் சின்னதிருப்பதி கன்னங்குறிச்சி மெயின் ரோடு பகுதியில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் வசித்து வருபவர் கலையரசன் (வயது 58),இவர் நேற்று மதியம் வீட்டைப் பூட்டிவிட்டு தனது மனைவியுடன் வேலை விஷயமாக வெளியே சென்றுவிட்டார்.இவரது வீட்டிற்குள் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டு அதன் பதிவுகளை தனது செல்போனில் பார்க்கும் வசதி உள்ளது.
நேற்று மாலை எதேச்சையாக கலையரசன் தனது செல்போனை பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தனது மனைவியுடன் உடனடியாக வீட்டிற்கு வந்து கலையரசன் பார்த்தபோது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 8 பவுன் கம்மல்கள், 3பவுன் தங்க சங்கிலி உள்பட மொத்தம் 11 பவுன் நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.
கொள்ளை போன தங்க நகைகளின் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும், இதுகுறித்து கலையரசன் அஸ்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர்.
வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் உள்ள பதிவுகளை ஆய்வு செய்து அதில் பதிவான உருவத்தை வைத்து கொள்ளையனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.