தமிழக செய்திகள்

கடத்தப்பட்ட மகளை தேடி சேலம் வந்த அங்கன்வாடி ஊழியர் சாவு

கடத்தப்பட்ட மகளை தேடி சேலம் வந்த அங்கன்வாடி ஊழியர் திடீரென்று மயங்கி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

மாலை மலர்

சேலம்:

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள மணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 46). இவர் அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

இவரது 2-வது மகள் நேற்று முன்தினம் திடீரென மாயமானார். இவரது மகளை சேலம் மூங்கில்பாடி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆசைவார்த்தை கூறி சேலத்திற்கு கடத்தி வந்தார்.

இதை அறிந்த முருகன் மற்றும் அவரது மனைவி வள்ளி மற்றும் உறவினர்கள் நேற்று  சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்து மகளை கடத்தி வந்த சிறுவனின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். 

அப்போது முருகன் திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறி மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் முருகன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் 

இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் முருகன் விஷம் குடித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் இன்று  பிரேத பரிசோதனை செய்த பின்னரே  முருகன் எவ்வாறு இறந்தார்? என்பது தெரியவரும்.