திண்டுக்கல்:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 23-ந்தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்குச்சாவடியில் வாக்காளர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்காக சாக்ஷம் என்னும் பிரத்யேக செயலியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளது. மாற்றுத்திறனாளி எனில் வாக்காளர் பட்டியலில் மாற்றுத்திறனாளி வாக்காளர் என்பதையும் தங்களை பற்றிய விவரங்களையும் இந்த செயலி மூலம் பதிவு செய்யலாம்.
முதல்முறை வாக்களிக்க உள்ள மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்தால் பெயர், முகவரி, செல்போன் எண் மாவட்டம், தொகுதி உள்ளிட்ட விவரங்கள் கிடைத்து விடும். மேலும் வாக்குப்பதிவு நாளில் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு சக்கர நாற்காலி, போக்குவரத்து உதவியாளர் உள்ளிட்ட வசதிகளை இதன் மூலம் பெறமுடியும். இந்த செயலியில் பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு குரல்வழி உதவி, கேட்கும் திறனற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பேசினால் எழுத்தாக பதிவாகும் வசதிகளும் அமைந்துள்ளன.
மேலும் வாக்குச்சாவடி அமைவிடம், வாக்குப்பதிவு அலுவலர்களின் தொடர்பு எண்கள் உள்ளிட்டவை இடம் பெற்றிருக்கும். மாற்றுத்திறனாளிகள் வாக்குப்பதிவின் போது தாங்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும் இந்த செயலிகளில் பதிவு செய்யலாம். இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோர் மூலம் பதிவு செய்து பயன்பெறலாம் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.