தமிழ்நாடு செய்திகள்

பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க வேதாரண்யம் கடலோர பகுதியில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை

மணியன்தீவு உள்ளிட்ட மீனவ கிராமங்களில் ‘சாகர் கவாச் ஆப்ரேஷன்’ பாதுகாப்பு ஒத்திகை இன்றும், நாளையும் நடக்கிறது.போலீசார் 4 குழுக்களாக பிரிந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Maalaimalar

வேதாரண்யம்:

கடலோர பகுதிகளில் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க கடலோர பாதுகாப்பு குழும போலீசாரால் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு 'சாகர் கவாச் ஆப்ரேஷன்' என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை தமிழகத்தின் கடலோர பகுதிகளில் இன்று தொடங்கியது.

அதன்படி, நாகை மாவட்டம், வேதாரண்யம் கடலோர பகுதிகளான ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், நாலுவேதபதி, கோடியக்கரை, மணியன்தீவு உள்ளிட்ட மீனவ கிராமங்களில் 'சாகர் கவாச் ஆப்ரேஷன்' பாதுகாப்பு ஒத்திகை இன்றும், நாளையும் நடக்கிறது.

முதல் நாளான இன்று ஆறுகாட்டுத்துறை கடற்பகுதியில் வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும டி.எஸ்.பி. சுந்தர் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் வரலட்சுமி, எஸ். எஸ்.ஐ.சசிகுமார் உள்பட 40-க்கும் மேற்பட்ட போலீசார் 4 குழுக்களாக பிரிந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

படகு மூலம் கடலுக்கு சென்று வழியில் தென்படும் மீனவர்களிடம் சந்தேகத்துக்கு இடமான நபர்கள் யாரேனும் தென்பட்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என முன்னெச்சரிக்கை விடுத்தனர்.