தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று ஆலந்தூரில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
காமராஜர் உயிரோடு இருக்கும் போது சென்னை அண்ணா சாலையில் சிலை வைத்தது தி.மு.க. ஆட்சியில் தான். காமராஜர் பிறந்த நாளை கல்வி நாளாக அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று சட்டம் இயற்றியவர் கலைஞர் கருணாநிதி தான். அதே போல் காமராஜர் உயிரிழந்த பின் அவருடைய உடலை கிண்டியில் உள்ள இடத்தில் கொட்டும் மழையில், இப்போது இருக்கிற மின்விளக்கு போல் அப்போது இல்லை, அதனால் கார் வெளிச்சத்தில் அடக்கம் செய்தவர் கலைஞர் தான். அப்போது இருந்த காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் காமராஜரின் வாரிசு கருணாநிதி என்று சொன்னார்கள்.
தற்போது தமிழகத்தில் ஆட்சி நடைபெறவில்லை காட்சி தான் நடைபெறுகிறது. அதனால் பட்ஜெட்டில் எதுவும் எதிர்பார்க்க முடியாது. இப்போது இருக்கக்கூடிய அமைச்சர்கள், சி.பி.ஐ.க்கு நான் மனு எதற்கு கொடுத்தேன் என்று கூட தெரியாமல் பேசுகின்றனர். அரசியலில் குதிரை பேரம் நடக்கிறது என்று கவர்னரிடம் மனு கொடுத்ததற்கு அவர் நடவடிக்கை எடுக்கிறாரோ, இல்லையோ நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் போது எங்களை கேள்வி கேட்பார்கள்.
மாணிக்கம் தாகூர், திடீரென்று அரசியலில் மேலே வந்தவர். அதனால் அவருக்கு இதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை. அவர் மாணிக்கம் தாகூர். அவர் ரவீந்திரநாத் தாகூர் பேரன் என்று நினைத்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கும் போது தான் வடசென்னையில் பெரிய அளவில் மாற்றம் உண்டானது. உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டது என்றார்.
நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் குணாளன் மற்றும் முரளி உட்பட கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.