திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ரெட்டமலை பகுதியில் எடமலைப்பட்டிபுதூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு அமர்ந்திருந்த 3 பேர் போலீசாரை கண்டதும் எழுந்து ஓட்டம் பிடித்தனர்.
அவர்களை விரட்டிச்சென்று பிடித்து அவர்களிடம் இருந்த பையை வாங்கி போலீசார் சோதனை செய்தனர். அதில், கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்தன. உடனே 3 பேரையும் பணத்துடன் எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், திருச்சி கருமண்டபத்தை சேர்ந்த மாடசாமி, கார்த்திக், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த முருகேசன் என்பது தெரியவந்தது.
மேலும், அவர்கள் வைத்திருந்த பையில் மொத்தம் ரூ.16 லட்சம் இருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக கேட்டபோது, அந்த பணம் தாங்கள் ஏர் டிராவல்ஸ் நிறுவனத்தில் விமான கட்டணத்துக்காக செலுத்த வேண்டிய தொகை என்று கூறினர்.
ஆனால் அந்த பணத்துக்கு உரிய ஆவணம் எதுவும் அவர்களிடம் இல்லாததால், இது குறித்து வருமான வரித்துறையினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். பணத்துக்கான உரிய ஆவணங்களை வருமான வரித்துறையினரிடம் காண்பித்துவிட்டு பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு அவர்களிடம் போலீசார் அறிவுறுத்தினர். இது குறித்து வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.