தமிழக செய்திகள்

காலை ராஜினாமா... மதியம் ஏற்பு - இரவு அம்பாசமுத்திரம் தொகுதி காலியானதாக அரசு அறிவிப்பு!

அம்பாசமுத்திரம் எம்எல்ஏவாக இருந்த இசக்கி சுப்பையா தவெகவில் இணைந்தார்.

அம்பாசமுத்திரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா இன்று காலை தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, அந்தத் தொகுதி காலியானதாகத் தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சட்டமன்றத் தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இசக்கி சுப்பையா, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டுத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார்.

காலையில் பதவியை ராஜினாமா செய்தநிலையில், மதியம் ராஜினாமாவை ஏற்பதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்தார். அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்ளப்பட்டதை அடுத்து, சட்டப்பேரவை செயலகம் இத்தொகுதியைக் காலியானதாக அறிவித்து அரசு இதழில் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஏற்கனவே திருச்சி கிழக்கு, மதுராந்தகம், பெருந்துறை மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தன. தற்போது அம்பாசமுத்திரம் தொகுதியையும் சேர்த்து மொத்தம் 5 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.