தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வருவாய் கிராமத்திற்குட்பட்ட ஜிட்டாண்டஅள்ளி ஊராட்சி, வஜ்ஜரபள்ளம் கிராமத்தில் சுமார் 30 குடும்பங்களை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
5 தலைமுறைகளாக இவர்கள் இப்பகுதியில் விவசாயம் செய்து வாழ்ந்து வருகின்றனர்.
அனாதீனம் புறம்போக்கு நிலமாக இருந்த இப்பகுதியை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வனப்பகுதியாக மாற்றப்பட்டதால், வனத்துறையினர் இவர்கள் விவசாயம் செய்ய கூடாது என்றும், இவர்கள் வளர்த்த மா, தென்னை மரங்களில் அறுவடை செய்ய கூடாது என்றும் மிரட்டி வருவதாகவும், மேலும் குடியிருக்கும் வீடுகளையும், மாட்டு கொட்டகைகளையும் அப்புறப்படுத்த வேண்டும் என தொடர்ந்து பாலக்கோடு வனத்துறையினர் மிரட்டி வருவாக தெரிவிக்கும் இப்பகுதி மக்கள் 5 தலைமுறையாக வசித்து வரும் வீட்டிற்கும், விவசாயம் செய்து வரும் நிலத்திற்கும் பட்டா கேட்டு கலெக்டர், எம்.எல்.ஏ, எம். பி.என அனைவரிடமும் மனு கொடுத்தும் இதுவரை எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாததால் வரும் 2026 சட்ட மன்ற தேர்தலை ஒட்டு மொத்த கிராமமும் புறக்கணிப்பதாகவும், மேலும் ரேசன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டைகளை ஒப்படைப்போம் என தெரிவித்துள்ளனர்.
மேலும், தேர்தல் புறக்கணிப்பை அறிவித்தும் எந்த ஒரு அதிகாரியும் இவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த கூட முன்வராதது மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தை வெளிக்காட்டுவதாக தெரிவித்துள்ளனர்.