தமிழக செய்திகள்

சிவகங்கை அரசு காப்பகத்தில் சுவர்ஏறி குதித்து தப்பிய 2 சிறுமிகள் மீட்பு

மாயமான சிறுமிகளை கண்டுபிடிக்க சுரேஷ் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.சிறுமிகள் இருவரும் நாகப்பட்டினம் அருகே கீழ்வேலூர் கிராமத்தில் ஒரு சிறுமியின் நண்பர் வீட்டில் தங்கியிருப்பது தெரியவந்தது.

Suresh K Jangir

சிவகங்கை:

சிவகங்கையில் சமூகநலத்துறை சார்பில் அரசு குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆதரவற்ற குழந்தைகள் தங்கி படித்து வருகின்றனர். மேலும் வழக்குகளில் தொடர்புடைய 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும் நீதிமன்றங்கள் அனுமதியோடு தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த 15 வயது சிறுமியும், தேவகோட்டை அருகே உள்ள திருவேகம்பத்தூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியும் இந்த காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் அவர்கள் இருவரும் கடந்த 2-ந் தேதி அதிகாலை காப்பகத்தில் இருந்து சுவர்ஏறி குதித்து தப்பி சென்றுவிட்டனர்.

சிறுமிகள் இருவரும் மாயமானது குறித்து விடுதி காப்பக பொறுப்பாளர் ஜெயா, சிவகங்கை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மாயமான சிறுமிகளை கண்டுபிடிக்க சுரேஷ் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

மாயமான சிறுமிகளை தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். பல இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் சிறுமிகள் இருவரும் நாகப்பட்டினம் அருகே கீழ்வேலூர் கிராமத்தில் ஒரு சிறுமியின் நண்பர் வீட்டில் தங்கியிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு சென்று சிறுமிகள் இருவரையும் மீட்டு சிவகங்கைக்கு அழைத்து வந்தனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.