தமிழக செய்திகள்

திருச்சி கலெக்டர் முகாம் அலுவலகத்தில் ரீல்ஸ் - வடமாநில வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

பின்னணியில் இந்தி திரைப்படத்தின் இசையுடன் வீடியோவை வாலிபர் தனது நண்பர்களுக்கு பகிர்ந்தார்.

ரீல்ஸ் மோகம் இன்றைய டிஜிட்டல் உலகில், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் குழந்தைகளிடையே மிக வேகமாகப் பரவி வருகிறது. சமூக ஊடகங்களில் குறுகிய வீடியோக்களைப் பதிவிட்டு, அதன் மூலம் பிரபலமடைய நினைக்கின்றனர். இதில் சிலர் பாதிப்புகளையும் சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் திருச்சியில் ரீல்ஸ் வெளியிட்ட வடமாநில வாலிபர் தற்போது அதிகாரிகளின் நடவடிக்கைக்கு உள்ளாகி உள்ளார். அது பற்றிய விவரம் வருமாறு:-

இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்

திருச்சி மாவட்ட கலெக்டரின் முகாம் அலுவலகம் திருச்சி காஜாமலை ரோட்டில் அமைந்துள்ளது. இங்கு கலெக்டர் அலுவலக ஊழியர்கள் பணிபுரிந்து வருவதுடன், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது அங்கு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணியில் வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் முகாம் அலுவலக அறையில் ஊழியர்கள் இல்லாத நேரத்தில் அங்கு உள்ளே நுழைந்த வடமாநில தொழிலாளி ஒருவர், ராஜநடை போட்டு அங்குள்ள சூழலும் இருக்கையில் அமர்ந்து கால்மேல் கால் போட்டு செல்போனில் ரீல்ஸ் எடுத்துள்ளார்.

மேலும் பின்னணியில் இந்தி திரைப்படத்தின் இசையுடன் அதனை நண்பர்களுக்கு பகிர்ந்தார். அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனைப்பார்த்த கலெக்டர் முகாம் அலுவலக ஊழியர்கள் மற்றும் போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட அந்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரீல்ஸ் மோகம் அந்த வட மாநில வாலிபரை எல்லை மீறச்செய்துள்ளது. திட்டமிட்டு அவர் எதுவும் செய்யவில்லை என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.