தமிழ்நாடு செய்திகள்

அச்சரப்பாக்கத்தில் ஆட்சிஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.4½ கோடி மதிப்பிலான நிலம் மீட்பு

நிலத்தை மீட்பது குறித்து மதுராந்தகம் சார்பு நீதிமன்றத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. கோவில் நிலங்களை ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

மாலை மலர்

மதுராந்தகம்:

அச்சரப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ ஆட்சிஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. தினந்தோறும் ஏராளமானோர் வந்து சாமி தரிசனம் செய்து செல்வார்கள். இந்த கோவிலுக்கு சொந்தமான நிலம் மற்றும் கட்டிடம் அச்சரப்பாக்கம் அருகே உள்ள பள்ளி பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையின் ஓரம் இருந்தது. இந்த நிலம் மற்றும் கட்டிடத்தினை சிலர் ஆக்கிரமித்து இருந்தனர்.

இந்த நிலத்தை மீட்பது குறித்து மதுராந்தகம் சார்பு நீதிமன்றத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து கோர்ட்டு உத்தரவுப்படி இந்து அறநிலையத்துறையின் செங்கல்பட்டு மாவட்ட உதவி ஆணையர் லஷ்மி காந்த பாரதிதாசன் தலைமையில் கோவில் நிலங்கள் வட்டாட்சியர் தங்கராஜ், செயல் அலுவலர் மேகவண்ணன், சரக ஆய்வாளர் பிரகாஷ் ஆகியோர் கொண்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்பில் இருந்த ஆட்சிஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடங்கள் குறித்து ஆய்வு செய்தனர்.

பின்னர் கோவில் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு மீட்கப்பட்டது. பின்னர் அந்த இடத்தில் அறிவிப்பு பலகையும் அளவை கற்களும் வைக்கப்பட்டது.

மீட்கப்பட்ட கோவில் நிலத்தின் மதிப்பு ரூ.4 1/2 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். கோவில் நிலங்களை ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.