தமிழக செய்திகள்

ஓ.பி.எஸ். தி.மு.க.வுக்கு சென்றதால் அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை- ஆர்.பி.உதயகுமார்

ஓ.பி.எஸ். உள்ளிட்ட நபர்கள் மீது கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கடந்த தேர்தலில் நூலிழையில் தான் நாங்கள் ஆட்சியை இழந்தோம்.

Maalaimalar

மதுரை:

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் பிரதமர் மோடி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் தேர்தல் பரப்புரை கூட்டம் வருகின்ற 1-ந்தேதி மண்டேலா நகரில் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்திற்கு வருகை தரும் பொது மக்களுக்கு குடிநீர், மருத்துவ வசதி, கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதலை காட்டும் வகையில் அம்மா பேரவை சார்பில் சீருடை அணிந்த 2,500 தூதுவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கான பயிற்சி முகாம் மண்டேலா நகரில் உள்ள திடலில் நடைபெற்றது. இந்த பயிற்சியை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். இதில் பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முனியசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசன், எஸ்.எஸ். சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

தொடர்ந்து ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:

இந்த பரப்பரை ஸ்டாலின் தலைமையிலான மன்னராட்சியை முடிவு கட்டும் வகையில் ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளமாக இருக்கும். ஓ.பி.எஸ். உள்ளிட்ட நபர்கள் மீது கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தற்போது அவர்கள் வேறு முகாம்களுக்கு செல்வது குறித்து எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. பிரதமர் மோடி எடப்பாடியாரை முன்னிறுத்தி பரப்புரை செய்ய வரும் நேரத்தில், இதை திசை திருப்பவும், மடைமாற்றம் செய்யவும், இதுபோன்ற செயல்களை சிலர் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இவர்கள் மாற்று முகாமுக்கு செல்வதால் அ.தி.மு.க.விற்கு எந்த விளைவுகளையும் ஏற்படுத்தாது. கடந்த தேர்தலில் நூலிழையில் தான் நாங்கள் ஆட்சியை இழந்தோம். எடப்பாடியார் அறிவித்து உள்ள தேர்தல் வாக்குறுதிகள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒரு செங்கலை காட்டி அரசியல் செய்தார்கள். இனி 100 செங்கலை காட்டினாலும், வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று எடப்பாடியார் செங்கோலை அவரது கையால் பிடிப்பார். நடிகர் விஜய் பரீட்சை எழுதினால் தான் அவர் பாசா அல்லது பெயிலா என தெரியவரும் என்றார்.