நெல்லை:
நெல்லை மாவட்டம் அம்பை சரக பகுதியில் விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. சங்கர் தலைமையிலும், இன்ஸ்பெக்டர் உலகராணி தலைமையிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக அவர்கள் விசாரணை நடத்தி உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் உள்ளிட்ட போலீசார் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கடந்த வாரம் கேட்டு கொள்ளப்பட்டது. ஆனால் யாரும் ஆஜராகாததால் சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரி தலைமையில் 6 பேர் கொண்ட போலீசார் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே ஏ.எஸ்.பி. பல்வீர்சிங்கின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட இசக்கிமுத்து, சதாம் உஷேன் மற்றும் டிரைவர்கள் விவேக், ஆண்ட்ரூஸ் ஆகிய 4 போலீசார் நேற்று நெல்லை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
இந்நிலையில் அருண்குமார் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வி.கே.புரத்தை சேர்ந்த மாரியப்பன் மற்றும் ரூபன் ஆகிய 2 சாட்சிகள் இன்று நெல்லையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.