வேலைவாய்ப்பு முகாம் 
தமிழக செய்திகள்

சென்னையில் நாளை மறுநாள் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

இந்த முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார்துறையில் பணியமர்த்தப்படும் நபர்களின், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது.

வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் சென்னை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் வருகிற 22-ந்தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

சென்னை அசோக்நகரில் அமைந்துள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடத்தப்படவுள்ளது.

ஆட்கள் தேர்வு

இந்த வேலைவாய்ப்பு முகாமில் 300-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். இம்முகாமில் 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பிளஸ் 2 தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டயப்படிப்பு படித்தவர்கள், ஐ.டி.ஐ. தொழில்கல்வி பெற்றவர்கள், என்ஜினீயரிங் பட்டம், கணினி இயக்குபவர்கள், தையல் கற்றவர்கள் என அனைத்து வித தகுதியுள்ள நபர்கள் கலந்து கொள்ளலாம்.

இந்த முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசம். இம்முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில்முனைவோர்களுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் வழிகாட்டுதல்கள் ஆகியன மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார்துறையில் பணியமர்த்தப்படும் நபர்களின், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள இளைஞர்கள் சென்னை கிண்டியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் அணுகியோ, https://forms.gle/W4Kvwo9LeMZg4sKS7 என்ற இணையதள முகவரியில் தங்களது விவரங்களை பதிவு செய்துகொண்டு பயன்பெறுமாறு சென்னை மாவட்ட கலெக்டர் மாலதி ஹெலன் தெரிவித்துள்ளார்.