திருச்சி:
ஸ்ரீரங்கத்தில் சாமி தரிசனம் செய்ய வந்த பிரதமர் நரேந்திர மோடி, கோவில் யானை ஆண்டாளிடம் ஆசிர் பெற்றார். யானை நிறுத்தப்பட்டிருந்த 4 கால் மண்டபத்திற்கு வந்த பிரதமர் மோடி, ஆண்டாள் யானைக்கு பழங்கள் வழங்கினார். பின்னர் யானையிடம் ஆசிர் பெற்ற அவர், யானை பாகனிடம் யானை குறித்து விவரங்களை கேட்டறிந்தார். அப்போது யானைக்கு 44 வயதாவது குறித்தும், அதன் சிறப்பம்சங்கள் குறித்தும் பாகன் எடுத்து கூறினார். மேலும் ஆண்டாள் யானை ஸ்ரீரங்கம் நவராத்திரி உற்சவத்தின் போது மவுத் ஆர்கன் வாசிக்கும் என்ற தகவலை கூறினார்.
இதனை கேட்டு ஆச்சர்யமடைந்த பிரதமர் நரேந்திர மோடி வாசிக்க வைக்குமாறு கேட்டார். உடனே பாகன் யானை துதிக்கையில் மவுத் ஆர்கன் கொடுக்க, ஆண்டாள் வாசித்து காண்பித்தது. இதனை ரசித்த மோடி வாஞ்சையுடன் யானையை தடவி கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தினார். இந்த ஆண்டாள் யானையானது, குட்டியாக காரமடை கோவிலில் இருக்கும் போது ரஜினிகாந்த நடித்த தம்பிக்கு எந்த ஊர் என்ற படத்தில் ரஜினிக்கு ஆசீர்வாதம் செய்யும் காட்சியில் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.