சென்னை:
சிவகங்கை மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த கர்ப்பிணிப் பெண் மற்றும் அவரது தாயாரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறி அவர்களுக்கான நிதியுதவியை அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் நெஞ்சத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நிவேதா என்பவரை பிரசவத்திற்காக உறவினர்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது, ஊத்திகுளம் அருகே எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தின் காரணமாக, கர்ப்பிணி பெண் நிவேதா மற்றும் அவரது தாயார் விஜயலட்சுமி ஆகியோர் உயிரிழந்தனர் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சியும் ஆழ்ந்த வருத்தமும் அடைந்தேன்.
மேலும் இதே விபத்தில் காயமடைந்த 3 நபர்களுக்கு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனையில் சிறந்த சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.