தமிழக செய்திகள்

ஆவணி மாத பவுர்ணமி கிரிவலம்: சென்னை, வேலூரில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம்

புதன்கிழமை நாளில் கிரிவலம் சென்றால் சகல கலைகளிலும் நல்ல வளர்ச்சி கிடைக்கும், மோட்சம் கிட்டும்.ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர்.

திருவண்ணாமலை:

ஆவணி மாதத்திற்கான பவுர்ணமி இன்று காலை 10.45 மணிக்கு தொடங்கி நாளை (வியாழக்கிழமை) காலை 8.19 மணிக்கு நிறைவடைகிறது.

இந்த நேரத்தில் கிரிவலம் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் இன்று காலை முதல் பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர்.

மேலும் பவுர்ணமியையொட்டி கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்னையில் இருந்து 250 பஸ்களும், பெங்களூரு மற்றும் சேலம் மார்க்கத்தில் இருந்து 50 பஸ்களும், வேலூர் மற்றும் ஆரணி மார்க்கத்தில் இருந்து 50 பஸ்களும் என 350 சிறப்பு பஸ்கள் இயக்கப்ப டுகின்றன.

புதன்கிழமை நாளில் கிரிவலம் சென்றால் சகல கலைகளிலும் நல்ல வளர்ச்சி கிடைக்கும், மோட்சம் கிட்டும்.

வியாழக்கிழமை கிரிவலம் வந்தால் குரு அருள் கிடைக்கும். ஞான சித்தி ஏற்படும்.

இந்த ஜென்மம் மட்டுமின்றி பல ஜென்ம குருமார்களின் ஆசியும் கிடைக்கும் எனவே ஆவணி பவுர்ணமி நாளில் கிரிவலம் வந்தால் சகல நன்மையும் சிறப்புகளும் தேடி வரும் என்று ஐதீகமாக கூறப்படுகிறது.

இதனால் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர். கோவிலில் இலவச தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிரிவலப் பாதையில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.