சென்னை தியாகராய நகர் தியாகராயா சாலையில் உள்ள பிரபல நகை கடைக்கு, அந்த கடையின் நீண்ட நாள் வாடிக்கையாளரான வேலூர் மாவட்டம் சேர்ந்த மனிஷா என்பவர் சமீபகாலமாக நகை வாங்குவதற்காக வந்துள்ளார்.
அப்போது தங்க மோதிரங்கள் ஒவ்வொன்றாக விரலில் அணிந்து வேகு நேரமாக பார்த்தவர் திடீர் என்று டிசைன்கள் ஒன்றும் சரியில்லை என்றும் எனக்கு பிடித்தமாதிரி நகைகள் இல்லை என்பதால் பிறகு வருகிறேன் என கூறி விட்டு அவசர அவசரமாக புறப்பட்டு சென்றார்.
அன்றைய தினம் இரவு கடை ஊழியர்கள் நகைகளை சரி பார்த்தபோது நான்கு சிறிய தங்க மோதிரங்களை காணவில்லை. இவற்றின் மதிப்பு 1.60 லட்சம் ரூபாய் என்பது தெரியவந்தது.
உடனே கடையில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அந்த காட்சியில் மனிஷா நான்கு மோதிரங்களை திருடி, இரண்டு மோதிரங்களை பையில் போட்டுக் கொண்டும், இரண்டு மோதிரங்களை விரல்களில் அணிந்து கொண்டும் வெளியே சென்றது தெரியவந்தது.
இது தொடர்பாக நகைக்கடை நிர்வாக ஊழியர்கள் மனிஷாவுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசியபோது நகைகளை நான் எடுக்கவில்லை என போனை துண்டித்து விட்டார். சந்தேகம் அடைந்து நேற்று இரவு மனிஷாவிடமிருந்து நகையை மீட்டுத் தருமாறு பாண்டி பஜார் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சிகளுடன் புகார் அளித்தனர்.
அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.