பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
தவெக ஆட்சியில் தொடர்கதையாகும் காவல் மரணங்கள் - மௌனம் காக்கும் முதல்வர் ஜோசப் விஜய்!
தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த வாலிபர் அருணாச்சலம், தென்பாகம் காவல் நிலையப் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
"போலீசார் தன்னைத் தலையில் தாக்கினர்" என உயிரிழப்பதற்கு முன் அருணாச்சலம் அளித்துள்ள மரண வாக்குமூல வீடியோ, இக்கொடூரத்தை அப்பட்டமாக அம்பலப்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன் சிறை ஊழியர்களின் கொடூரத் தாக்குதலால் பலியான அதிர்ச்சி அடங்குவதற்குள், தற்போது தூத்துக்குடியில் மீண்டும் காவல் மரணம்(Custodial Death) நிகழ்ந்துள்ளது. இன்னும் எத்தனை காவல் மரணங்கள் நிகழும் என முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் விளக்க வேண்டும்.
ஆட்சி அமைந்த குறுகிய காலத்திலேயே அடுத்தடுத்து நிகழும் இத்தகைய சம்பவங்கள், தமிழகத்தில் காவல் மரணங்கள் தொடர்கதையாக மாறியுள்ளதை நிரூபிக்கின்றன.
எனவே, பாதிக்கப்பட்ட அருணாச்சலத்தின் மரணத்திற்குப் பொறுப்பான தென்பாகம் காவல் நிலைய அதிகாரிகள் மீது உடனடியாகக் கொலை வழக்குப் பதிவு செய்து அவர்களைக் கைது செய்வதோடு, பாதிக்கப்பட்ட அவரது குடும்பத்தினருக்குத் தகுந்த நீதியையும், இழப்பீட்டையும் விரைந்து வழங்க வேண்டும் என தவெக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.