தமிழக செய்திகள்

ஓமலூர் அருகே அரசு பள்ளி மாணவிகள் 5 பேரிடம் சில்மிஷம்- ஆசிரியர் மீது போக்சோ வழக்கு

விசாரணை முடிவில் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.போக்சோ வழக்கில் சிக்கிய ஆசிரியர் தங்கவேல் நெல்லை மாவட்டம் வடக்கன்பட்டியை சேர்ந்தவர் ஆவார்.

Maalaimalar

ஓமலூர்:

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள காடையாம்பட்டி பகுதியில் உள்ள சுண்டக்காபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 4 மற்றும் 5-ம் வகுப்பு படித்து வரும் 5 மாணவிகளிடம் வகுப்பு ஆசிரியர் தங்கவேல் (43) என்பவர் சில்மிஷத்தில் ஈடுபட்டு வருவதாக தலைமை ஆசிரியருக்கு புகார் வந்தது.

மாணவிகளின் புகார் குறித்து தலைமை ஆசிரியர் ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஆசிரியர் தங்கவேல் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அரசு பள்ளியில் 5 மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியரை போலீசார் பிடித்து விசாரித்து வரும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போக்சோ வழக்கில் சிக்கிய ஆசிரியர் தங்கவேல் நெல்லை மாவட்டம் வடக்கன்பட்டியை சேர்ந்தவர் ஆவார்.