கன்னியாகுமரி படகு தளத்தில் டெல்லியில் இருந்து வந்த சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சி. 
தமிழக செய்திகள்

பிரதமர் மோடி வருகையையொட்டி பகவதி அம்மன் கோவிலில் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

பிரதமர் மோடி நாளை மாலை திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு கன்னியாகுமரி வருகிறார்.பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள் குழுவினர் இன்று காலை கோவிலுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

கன்னியாகுமரி:

பிரதமர் நரேந்திர மோடி நாளை (வியாழக்கிழமை) மாலை திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு கன்னியாகுமரி வருகிறார். கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் அமைந்து உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் வந்து இறங்கும் அவர் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். அதன் பிறகு அவர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வருவதையொட்டி பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள் குழுவினர் இன்று (புதன்கிழமை) காலை 8 மணிக்கு கோவிலுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின்போது கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார், நாகர்கோவில் ஆர்.டி.ஓ. காளீஸ்வரி, அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அனில்குமார், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் உள்பட பலர் சென்று இருந்தனர்.