தமிழக செய்திகள்

பரீட்சை எழுதுவது போல் குறைகளை எழுதி தள்ளிய மயிலாப்பூர் மக்கள்- தமிழிசை வித்தியாசமான ஏற்பாடு

முக்கியமான குறைகளை சுட்டிக்காட்டிய 3 பேருக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

சென்னை:

மயிலாப்பூர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்த கையேடு வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. அரங்கத்தில் நடந்த இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் மயிலாப்பூர் தொகுதிவாசிகள் என சுமார் 800 பேர் பங்கேற்றனர்.

இந்த கூட்டதில் மத்திய மந்திரி ஜே.பி. நட்டா பங்கேற்றார். மாலை 6.30 மணிக்கு வரவேண்டிய அவர் விமானம் தாமதத்தால் வருவதற்கு 3 மணி நேரம் தாமதம் ஆனது.

அந்த நேரத்தில் கட்சியினர் பேசி பேசியே கூட்டத்தினரை சலிப்படைய செய்வதை விட பொதுமக்களையே பேச வைக்கும் வகையில் வித்தியாசமான முயற்சியை தமிழிசை கையில் எடுத்தார். அதன்படி ஒரு சிலர் மேடையில் ஏறி பேசினார்கள். மற்ற அனைவருக்கும் பேப்பர் கொடுத்து அவரவர் பகுதி குறைகளை எழுதும்படி கேட்டுக்கொண்டார். பரீட்சை எழுதுவது போல் அனைவரும் எழுதினார்கள். அதிலும் பலர் உற்சாகமாக யோசித்து யோசித்து எழுதினார்கள்.

பொது கழிப்பறைகள் இல்லாதது, குடிநீர் வசதி இல்லாதது, நடக்க முடியாத படி போக்குவரத்து நெரிசல் இருப்பது ஆகியவற்றை சுட்டிக்காட்டி இருந்தார்கள். முக்கியமான குறைகளை சுட்டிக்காட்டிய 3 பேருக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

இரவு 9 மணியளவில் கூட்டத்துக்கு வந்துசேர்ந்த ஜே.பி. நட்டா, தி.மு.க.வின் திரித்து விடும் அரசியலை ஜனநாயக ரீதியில் எதிர் கொள்வோம். இந்த பகுதியின் வளர்ச்சிக்கு ஆத்மார்த்தமாக பாடுபடும் தமிழிசையை தேர்வு செய்யுங்கள் என்றார்.