நடைபெறவுள்ள 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அந்தவகையில் இன்று திருவண்ணாமலையில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,
திருவண்ணாமலை திமுகவின் கோட்டை. திருவண்ணாமலையை கருணாநிதிதான் தனி மாவட்டமாக உருவாக்கினார். இப்போது மாநகராட்சியாக தரம் உயர்த்தியுள்ளோம். மலைகளும், அருவிகளும் நிறைந்த மாவட்டம் கள்ளக்குறிச்சி.
இரண்டு மாவட்டங்களுக்கும் எண்ணற்ற திட்டங்களை கொடுத்துள்ளோம். நான் லிஸ்ட் போட்டு சொல்வதுபோல பழனிசாமியிடம் லிஸ்ட் இருக்கிறதா? அதனால்தான் ஊர் ஊராக சென்று புலம்பிக் கொண்டிருக்கிறார். அவரது எதுவும் செய்யமாட்டார். நாம் செய்வதையும் சகித்துக்கொள்ளமாட்டார்.
உங்களுடன் ஸ்டாலின் முகாமை தடுத்து நிறுத்த வழக்கு தொடர்ந்தார். 10 லட்சம் அபராதம் விதித்தது நீதிமன்றம். இனிமேல் ஆண்டுதோறும் இந்த முகாம் நடத்தப்படும். அதேபோல் நூறுநாள் வேலைத்திட்டத்திலும் மக்களுக்கு துரோகம் செய்தவர் பழனிசாமி. அத்திட்டத்தின் பெயரை பாஜக மாற்றியது. வேலைக்கான சம்பளம் வரவில்லை. புதிதாகவும் வேலை தரவில்லை.
இதுதொடர்பாக திமுகவும், கூட்டணி கட்சிகளும் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தியுள்ளோம். ஆனால் பழனிசாமி 200 நாட்கள் வேலை என உருட்டினார். அவர் இவ்வாறு முட்டுக் கொடுப்பதை பார்த்து நாடாளுமன்றமே ஆடிப்போய் விட்டது. இதேபோலத்தான் பாஜகவே வாபஸ்பெற்ற மூன்று வேளாண் திட்டங்களுக்கு முரட்டு முட்டுக்கொடுத்தார்.
சிறப்பு தீவிர திருத்தப் பணிகளைகூட தடுத்தோம். இரண்டு மாதங்களில் திருத்தம் நடைபெறக்கூடாது என போராடினோம். முடிந்தவரை மக்களின் வாக்குரிமையை காப்பாற்றினோம். இந்த விவகாரத்திலும் முட்டாள்தனமாக பேசினார் பழனிசாமி.
ஏதாவது ஒரு விஷயத்திலாவது அவர் டெல்லி பக்கம் நிக்கமால், தமிழ்நாடு பக்கம் நின்றுள்ளாரா? தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் பாஜக செய்யும் ஒரு செயலையாவது கண்டித்துள்ளீர்களா? உலகத்திற்கே பொதுவான திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசினர். அதை எதிர்த்து பேசவில்லை. இந்திக்கும், சமஸ்கிருதத்திற்கும் பூசணிக்காய் அளவில் மத்திய அரசு நிதி ஒதுக்கியது.
ஆனால் தமிழுக்கு பட்டாணி அளவுக்கூட இல்லை. கீழடியறிக்கையை ஏன் வெளியிடவில்லை என பாஜகவை பலமுறை கேட்கிறோம். ஆனால் பழனிசாமி இதுகுறித்து பேசமாட்டார். 2024 தேர்தலுக்கு பாஜக கூட்டணியில் இருந்து வெளியேவந்துவிட்டோம் எனக் கூறினார்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை எனக்கூறினார். ஆனால் இப்போது என்ன ஆனது? பச்சோந்தியைவிட வேகமாக காவி நிறத்திற்கு மாறினார். ” எனப் பேசினார்.