ராமநாதபுரம்:
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் குறைந்த தினங்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். எடப்பாடி தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி சார்பில் தொகுதி பங்கீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள பல தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அ.தி.மு.க.வினர் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி பா.ஜ.க.விற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனால் அந்த தொகுதியை சேர்ந்த அ.தி.மு.க.வினர் கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர். தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அ.தி.மு.க. சார்பில் அதிருப்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
அதில் ‘ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி இரட்டை இலையிலேயே வேண்டும் தாமரை வேண்டாம்’ என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.
அதே போல் மற்றொரு சுவரொட்டியில் அ.தி.மு.க. வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ள ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியை பா.ஜ.க.விற்கு ஒதுக்கிய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடனே மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் தொகுதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.