தமிழக சட்டசபை தேர்தலில் த.வெ.க. தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்துள்ளது.
இந்த தேர்தலில் தான் போட்டியிட்ட பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் விஜய் வெற்றி பெற்றார்.
ஒருவர் ஒரு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக மட்டுமே இருக்க முடியும் என்பதால் விஜய் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். பெரம்பூர் தொகுதியை வைத்துக்கொண்டார்.
இதற்கிடையே, த.வெ.க.வுக்கு வாக்களித்து, ஆட்சி பீடத்தில் அமர்த்திய மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டங்களை நடத்த எம்.எல்.ஏ.க்களுக்கு விஜய் உத்தரவிட்டார்.
தன்னை தேர்ந்தெடுத்த பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி கூற முதலமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளார். பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. ஆகி விட்டதால், திருச்சி கிழக்கு தொகுதி மக்கள் ஏமாற்றம் அடைந்து விடக்கூடாது என்பதற்காக முதலில் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி கூற முதலமைச்சர் விஜய் முடிவு செய்து இருக்கிறார்.
அதன்படி, நாளை முதலமைச்சர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதிக்கு செல்ல இருக்கிறார்.
இந்நிலையில், முதலமைச்சர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதிக்கு செல்லவுள்ள நிலையில், அமைச்சர் என்.ஆனந்த் முக்கிய அறிவுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில் அவர் கூறியிருப்பதாவது:-
தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலந்துகொள்ளும், திருச்சிராப்பள்ளி மாவட்ட மக்கள் சந்திப்பு மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி, நாளை (01.06.2026) திங்கள்கிழமை, திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் மாலை 4.15 மணி முதல் நடைபெற உள்ளது.
காவல் துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க, அனுமதி பெற்றவர்களுக்கான நிகழ்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5000 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது.
QR குறியீடு அனுமதிச் சீட்டானது, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பாதுகாப்புக் கருதி, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை. எனவே இவர்கள் யாரும் கண்டிப்பாக வர வேண்டாம்.
காவல்துறையின் வழிகாட்டுதலின்படி, பங்கேற்பாளர்கள் தங்களது வாகனங்களை நிறுத்தும் போது, அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாதவாறு நிறுத்த வேண்டும்.
QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளவர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அனுமதிச் சீட்டு இல்லாத கழகத் தோழர்களும் பொதுமக்களும் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே அவர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி, சமூக வலைத்தள நேரலைகளில் கண்டு, QR குறியீடு அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.