தமிழக செய்திகள்

மாநகர பஸ் டிக்கெட்டுகளுக்கு ஆன்லைனில் பணம் செலுத்தும் வசதி அறிமுகம்

படிப்படியாக சென்னையில் உள்ள மற்ற டெப்போக்களுக்கும் விரிவுபடுத்தப்பட வாய்ப்புள்ளது.பயணிகள் தங்கள் செல்போன்களை பயன்படுத்தி ஸ்கேன் செய்து பணம் செலுத்தலாம்.

சென்னை:

சென்னையில் மாநகர பஸ்களில் டிக்கெட்டுகளுக்கு ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல் முறையாக பல்லாவரம் பஸ் டெப்போவில் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இதற்காக பல்லாவரத்தில் உள்ள மாநகரபோக்குவரத்து கழக பஸ் கண்டக்டர்களுக்கு, யுபிஐ மற்றும் கார்டு மூலம் டிஜிட்டல் முறையில் பணம் பெறும் புதிய கையடக்க கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த திட்டம் படிப்படியாக சென்னையில் உள்ள மற்ற டெப்போக்களுக்கும் விரிவுபடுத்தப்பட வாய்ப்புள்ளது. இந்த தொடுதிரை சாதனங்கள் மூலம், பயணிகள் ஏறும் பஸ் நிறுத்தத்தின் பெயரையும் அவர்கள் சேருமிடத்தையும் கண்டக்டர் தேர்வு செய்யலாம். அவர்கள் தேர்வு செய்தவுடன், பயணிகள் பணம், கார்டுகள் மற்றும் யுபிஐ உள்ளிட்ட பல்வேறு வகைகளில் டிக்கெட் கட்டணம் செலுத்தலாம். யுபிஐ முறை தேர்ந்தெடுக்கப்பட்டால், கியூஆர் குறியீடு திரையில் காட்டப்படும். பயணிகள் தங்கள் செல்போன்களை பயன்படுத்தி ஸ்கேன் செய்து பணம் செலுத்தலாம்.

மேலும் தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் அனைத்து மாநகர போக்குவரத்து கழக பஸ்களுக்கும் கியூஆர் அடிப்படையிலான டிக்கெட் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், பயணிகள் தங்கள் மொபைல் செயலியை பயன்படுத்தி தங்கள் கணக்குகளை ரீசார்ஜ் செய்யலாம். மேலும் பயணிகள் தங்களுக்கான கியூஆர் குறியீட்டை பயன்படுத்தி சென்னை மெட்ரோ ரெயில் மற்றும் உள்ளூர் ரெயில்களிலும் பயணிக்கலாம்.

இதற்காக அனைத்து பஸ்கள் மற்றும் ரெயில்களின் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் கியூஆர் ஸ்கேனர்கள் நிறுவப்பட உள்ளது. மேலும் பயணிகள் பயணம் செய்யும் போது கியூஆர் குறியீடுகளை பஸ் கண்டக்டர்கள் மற்றும் ரெயில் டிக்கெட் பரிசோதகர்களிடம் காண்பிக்கலாம்.