இன்று முதல் கடற்கரை-தாம்பரம் இடையே இரவு நேர மின்சார ரெயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட இருப்பதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் சுமார் ரூ.842 கோடி மதிப்பில் சர்வதேச தரத்திலான மறுசீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் முக்கிய பகுதியாக, பயணிகள் வசதிக்காக பிரம்மாண்ட இரும்பு நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த பணியின் காரணமாக கடந்த 25-ந்தேதி முதல் நேற்று வரையில் இரவு 11.15 மணி முதல் அதிகாலை 4.15 மணி (5 மணி நேரம்) வரையில் கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு இடையே இருமார்க்கமாகவும் இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.
இந்தநிலையில் இன்று முதல் கடற்கரை-தாம்பரம் இடையே இரவு நேர மின்சார ரெயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட இருப்பதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், "இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்த காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்தது.
எனவே, இந்த வழித்தடத்தில் மின்சார ரெயில்கள் வழக்கம்போல இயக்கப்படும். அடுத்தகட்டமாக ரெயில் மாற்றங்கள் குறித்த புதிய அறிவிப்பு ரெயில்வே நிர்வாகம் சார்பில் வரும் வரையில் இதே நடைமுறை தொடரும்" என்றனர்.