தமிழக செய்திகள்

பெண்களுக்கு எதிரான ஆபாச கருத்து: எச்.ராஜா மீதான வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு

பெண்களுக்கு எதிராக ஆபாசக் கருத்து தெரிவித்ததாக எச்.ராஜா மீது வழக்கு தொடரப்பட்டதுதனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி எச்.ராஜா தாக்கல் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்

கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிராக ஆபாசக் கருத்து தெரிவித்ததாக பாஜக நிர்வாகி எச்.ராஜாவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் உட்பட திமுக நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து, எச்.ராஜா மீது ஈரோடு டவுன் காவல்துறை வழக்கு பதிவு செய்தது. எச்.ராஜாவுக்கு எதிரான வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், இந்த வழக்கு, சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இதனையடுத்து, தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி எச்.ராஜா தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கை 3 மாதங்களில் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி எச்.ராஜா மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்கள்தானா? என நீதிபதி ஜெயசந்திரன் கேள்வி எழுப்பினார். அதற்கு எச்.ராஜா தரப்பு, "ஆம்" என்று பதில் அளித்தது.

இதனை தொடர்ந்து வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதிபதி, விசாரணையை சந்திக்க அறிவுறுத்தி, அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT